உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

தென்மேற்கு பருவமழை : கால்நடைகளுக்கு உலர்ந்த திடமான தீவனங்களை கொடுக்க வேண்டுகோள்

Published On 2022-07-07 11:35 GMT   |   Update On 2022-07-07 11:35 GMT
  • காலை நேர காற்றின் ஈரப்பதம் 75 சதவீதம், மாலை நேரத்தில் 65 சதவீதமாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
  • நெல் சாகுபடியில் பகல் நேர வெப்பநிலை, நாற்றங்காலில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் நிலவ ஏதுவாக உள்ளது.

உடுமலை :

தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் சார்பில் மாவட்ட வாரியாக வானிலை சார்ந்த வேளாண் அறிக்கை வெளியிடப்படுகிறது. அவ்வகையில் இவ்வாரம் திருப்பூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

காலை நேர காற்றின் ஈரப்பதம் 75 சதவீதம், மாலை நேரத்தில் 65 சதவீதமாகவும் இருக்க வாய்ப்புள்ளது.நெல் சாகுபடியில் பகல் நேர வெப்பநிலை, நாற்றங்காலில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் நிலவ ஏதுவாக உள்ளது. நாற்றங்காலை கண்காணித்து தேவைப்பட்டால் 5 சதவீத வேப்பங்கொட்டை சாறு தெளிக்கலாம்.எதிர்பார்க்கப்படும் மழையை பயன்படுத்தி இறவை மக்காச்சோளம், சூரியகாந்தி நடவு செய்வதை தொடரலாம்.

வளர் பருவத்தில் உள்ள கரும்பு சாகுபடியில் காய்ந்த தோகை உரிப்பது மற்றும் விட்டம் கட்டுவதன் வாயிலாக 150 நாட்கள் வயதுடைய முன் பருவ கரும்பில் துளைப்பான் பூச்சியின் தாக்கத்தை குறைக்கலாம். மழையுடன் காற்றின் வேகம் 10-14 கி.மீ., வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் 5 மாதங்களுக்கு மேலுள்ள வாழை மரங்களுக்கு முட்டுக்கொடுக்க வேண்டும்.

தென்னை மரங்களுக்கு முதல் உரமாக மரம் ஒன்றுக்கு, யூரியா 650 கிராம், சூப்பர் பாஸ்பேட், பொட்டாஷ் தலா 1 கிலோ மற்றும் வேப்பம் புண்ணாக்கை 2 கிலோவை, 50 கிலோ எருவுடன் கலந்து இடலாம்.குரும்பை உதிர்வை தடுக்க மரத்துக்கு 200 மி.லி., வீதம் வேளாண் பல்கலையின் வளர்ச்சி ஊக்கியை வேர் வாயிலாக அளிக்கலாம். உள்நோக்கிய வட்டப்பாத்தி எடுப்பதால் மழைநீரை சேகரிக்கலாம்.

மழையின் காரணமாக புதிதாக முளைத்த புல்லை, கால்நடைகள் மேயவிடாமல் பாதுகாக்க வேண்டும். காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால் கால்நடைகளுக்கு உலர்ந்த திடமான தீவனங்களை கொடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News