கோப்புபடம்
உழவர் சந்தைகளில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை
- 3 உழவர் சந்தைகளில் தக்காளி குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- 320கிலோ தக்காளியை கிலோ ஒன்றுக்கு ரூ.88 என்ற அளவில் விற்பனை செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் வெளிசந்தைகளில் தக்காளி அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறையின் மூலம் வரத்தினை அதிகரித்து பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தக்காளி தடையின்றி கிடைக்க தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனை அலுவலர்கள் ஆகியோர் ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து திருப்பூர் தெற்கு, பல்லடம், உடுமலைப்பேட்டை ஆகிய 3 உழவர் சந்தைகளில் தக்காளி குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் வெளி சந்தையில் தக்காளி விற்பனை செய்யும் விவசாயிகள் உழவர் சந்தைகளில் உள்ள தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை வளர்ச்சி முகமை மூலம் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. திருப்பூர் தெற்கு உழவர் சந்தையில் தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை வளர்ச்சி முகமையின் மூலம் விவசாயிகள் சுமார் 320கிலோ தக்காளியை கிலோ ஒன்றுக்கு ரூ.88 என்ற அளவில் விற்பனை செய்தனர்.
இதே போல் பல்லடம் உழவர் சந்தையில் தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை வளர்ச்சி முகமையின் மூலம் விவசாயிகள் சுமார் 265 கிலோ தக்காளிகளை ஒரு கிலோ ரூ.85 க்குவிற்பனை செய்தனர். உடுமலைப்பேட்டை உழவர் சந்தையில் தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை வளர்ச்சி முகமையின் மூலம் விவசாயிகள் சுமார் 300 கிலோ தக்காளியை ஒரு கிலோ ரூ.79க்கு விற்பனை செய்தனர் என மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.