உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

சுட்டெரிக்கும் வெயிலால் சூடுபிடிக்கும் நுங்கு விற்பனை

Published On 2023-04-03 10:14 GMT   |   Update On 2023-04-03 10:14 GMT
  • வேலைகளுக்காக பகல் நேரங்களில் வரும் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வருகின்றனர்
  • நகர கிராம நெடுஞ்சாலை ஓரங்களில் மர நிழல்களில் நுங்கு விற்பனை நடைபெற்று வருகிறது

காங்கயம்

காங்கயம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே வருவதற்கு அச்சப்பட்டு வீட்டிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பல்வேறு வேலைகளுக்காக பகல் நேரங்களில் வரும் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வருகின்றனர்.வழக்கமாக ஏப்ரல், மே மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும். ஆனால் நடப்பாண்டில் கடந்த மாதம் முதலே வெயில் வாட்டி வதைக்கத் ெதாடங்கியுள்ளது.

இந்த சூழ்நிலையில் வெப்பத்தை தணித்துக்கொள்ள தண்ணீரையும், நிழல் தரும் மரங்களையும் தேடிச்செல்ல வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அதிக நீர்ச்சத்துள்ள மற்றும் முற்றிலும் கலப்படம் இல்லாத முழுமையான இயற்கை குணம் நிறைந்த, உடல் சூட்டை தணிக்கும் பனை நுங்கை தேடிச்சென்று சாப்பிடுகின்றனர்.அந்தவகையில் தற்போது திருப்பூர் மாவட்டம் காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில் நுங்கு விற்பனை சூடு பிடித்துள்ளது. நகர, கிராம, நெடுஞ்சாலை ஓரங்களில் மர நிழல்களில் நுங்கு விற்பனை நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தற்போது பொதுமக்களிடம் இயற்கை உணவுகள் குறித்த விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நுங்கு விற்பனை சூடு பிடித்துள்ளதாக நுங்கு வியாபாரிகள் தெரிவித்தனர். 3 கண் உள்ள ஒரு நுங்கு ரூ.20 க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் நுங்கை வாங்கிச் சென்றனர்.

Tags:    

Similar News