உடுமலை சுற்றுலா தலங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்க கோரிக்கை
- கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், பழநி, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதற்கும், உடுமலை பிரதான வழித்தடமாக உள்ளது.
- திருமூர்த்தி மலையில் மும்மூர்த்திகளின் தலமும் அமைந்துள்ளதால் பண்டிகை நாட்களில் இங்கு கூட்டம் அதிகரித்து காணப்படும்.
உடுமலை:
கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், பழநி, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதற்கும், உடுமலை பிரதான வழித்தடமாக உள்ளது. இதனால் விடுமுறை நாட்களில், கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், திண்டுக்கல் உள்பட வெளி மாவட்டங்களில் இருந்தும், பாலக்காடு போன்ற பிற மாநிலத்தை சேர்ந்த பகுதிகளில் இருந்தும், இங்குள்ள சுற்றுலா பகுதிகளுக்கு பயணிகள் அதிக அளவில் வருகை தருவது வழக்கம்.
திருமூர்த்தி மலையில் மும்மூர்த்திகளின் தலமும் அமைந்துள்ளதால் பண்டிகை நாட்களில் இங்கு கூட்டம் அதிகரித்து காணப்படும். தற்போது வழக்கமாக ஒரு மணி நேரத்துக்கு ஒரு பஸ் என்ற விகிதத்தில், பஸ்கள் இயக்கப்படுகிறது. சிறப்பு நாட்களில் கூடுதல் பஸ்கள் இல்லாததால், வெளியூரிலிருந்து வரும் பயணிகள் சரியான பஸ் நேரமும் தெரியாமல், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாகின்றனர். எனவே, தீபாவளி பண்டிகை விடுமுறையையொட்டி உடுமலை சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு, கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.