உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

மானிய விலையில் மா ஒட்டுச்செடிகள் வினியோகம் - வேளாண் வளர்ச்சி திட்ட கிராம விவசாயிகளுக்கு அழைப்பு

Published On 2023-01-08 05:42 GMT   |   Update On 2023-01-08 12:49 GMT
  • மத்திய, மாநில அரசுகள் சார்பில் பழ வகை சாகுபடிக்கு ஏராளமான மானிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
  • மாம்பழம் காய்ப்புக்கு வரும் வரை ஊடுபயிராக காய்கறி பயிர்களை சாகுபடி செய்யலாம்.

மடத்துக்குளம்:

மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில் மா ஒட்டுச்செடிகள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.இது குறித்து மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் கூறியதாவது:-

முக்கனிகளில் முதலிடத்திலுள்ள மாம்பழம் உற்பத்தி 55 சதவீதம் இந்தியாவில் உற்பத்தியாகிறது. மத்திய, மாநில அரசுகள் சார்பில் பழ வகை சாகுபடிக்கு ஏராளமான மானிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.மா சாகுபடிக்கு நல்ல வடிகாலுடன் கூடிய செம்மண் ஏற்றதாகும். ஜூலை முதல் டிசம்பர் வரை மா சாகுபடிக்கு ஏற்ற பருவமாகும்.தமிழகத்தில் நீலம், பெங்களூரா, நடுச்சாலை, செந்தூரம், அல்போன்சா, ஹி மாயூதீன், மல்கோவா ஆகிய ரகங்கள் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது.

மா சாகுபடிக்கு முன் நிலத்தை நன்கு உழவு செய்து தலா ஒரு மீட்டர் நீளம், அகலம் மற்றும் ஆழம் தோண்டி குழி ஒன்றுக்கு 10 கிலோ தொழு உரம் மற்றும் மேல் மண் உரம் நன்கு கலந்து குழியின் முக்கால் பாகம் வரை மூடி ஒட்டுக்கட்டிய செடிகளை நட வேண்டும்.செடிக்கு செடி, 5 மீட்டர் முதல் 10 மீட்டர் வரை அடர் நடவு முறையில் அல்போன்சா, பங்கனபள்ளி மல்லிகா போன்ற ரகங்கள் நடலாம். மாம்பழம் காய்ப்புக்கு வரும் வரை ஊடுபயிராக காய்கறி பயிர்களை சாகுபடி செய்யலாம்.தழை, மணி சாம்பல் சத்து கொண்ட உரங்களை செப்டம்பர் , அக்டோபர் மாதங்களில் இட வேண்டும். மூன்று ஆண்டுக்கு ஒரு முறை கவாத்து செய்ய வேண்டும்.

மடத்துக்குளம் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களிலுள்ள விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்தில் மா செடிகள் வழங்கப்படுகிறது.

சிட்டா, அடங்கல், உரிமைச் சான்று, ரேஷன் கார்டு நகல், ஆதார் நகல், வங்கி கணக்கு நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-2 ஆகியவற்றுடன் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.மேலும் விபரங்களுக்கு உதவி தோட்டக்கலை அலுவலர்கள், தாமோதரன் 96598 38787; நித்யராஜ் 63821 29721 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தெரிவித்தார். 

Tags:    

Similar News