உள்ளூர் செய்திகள்

விபத்து நடந்த பகுதியில் போலீசார் விசாரணை நடத்திய காட்சி.

ஊத்துக்குளி நான்கு ரோடு சந்திப்பில் விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

Published On 2023-04-16 07:39 GMT   |   Update On 2023-04-16 07:39 GMT
  • வேகத்தடை, பேரிகார்டுகள் இல்லாததால் இளைஞர்கள் மிக அதிவேகமாக வாகனத்தை இயக்குகின்றனர்.
  • பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இளைஞர்கள் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

ஊத்துக்குளி:

ஊத்துக்குளியில் இருந்து திருப்பூர் செல்லும் மெயின் ரோட்டின் அருகில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ,ஊத்துக்குளி சார் பதிவாளர் அலுவலகம் ,கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி சாமி கோவில் ஆகிய இடங்கள் உள்ளன. காலை மற்றும் மாலை நேரத்தில் பள்ளி மாணவ மாணவிகள், கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அதிகமாக இந்த வழியை பயன்படுத்துகின்றனர். இந்த நான்கு ரோடுகள் சந்திக்கும் இடத்தில் ஏற்கனவே பலமுறை விபத்துக்கள் நடந்துள்ளன, கடந்த மூன்று மாதத்தில் 5க்கும் மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக இந்த பகுதியில் வேகத்தடை, பேரிகார்டுகள் இல்லாததால் இளைஞர்கள் மிக அதிவேகமாக வாகனத்தை இயக்குகின்றனர். இன்று கை குழந்தையுடன் ஒருவர் இந்த ரோட்டில் வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது பின்னால் அதிவேகமாக இளைஞர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியதில் முன்னாள் சென்று கொண்டிருந்த வண்டி நிலைகுலைந்து குழந்தையுடன் நடுரோட்டில் விழுந்தனர். குழந்தை கீழே விழுந்ததில் லேசான காயத்தோடு அதிர்ஷ்டவசமாக தப்பினர். உடனே அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஊத்துக்குளி போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இளைஞர்கள் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

பலமுறை விபத்துக்கள் ஏற்பட்ட இந்த ரோட்டில் வேகத்தடை அல்லது பேரிகாடுகள் வைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் இதனை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை, எனவே வரும் காலத்தில் மிகப்பெரிய விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க இந்த நான்கு ரோடுகள் சந்திக்கும் இடத்தில் பேரிகாடுகள் வைத்து வாகனத்தின் வேகத்தை குறைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News