உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

திருப்பூரில் வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை சேகரிக்கும் பணி தீவிரம்

Published On 2022-07-15 06:42 GMT   |   Update On 2022-07-15 06:42 GMT
  • தொழிலாளர் போர்வையில் கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் பலர் மக்களோடு மக்களாக கலந்துள்ளனர்.
  • மாநகர போலீசார், புதிய சாப்ட்வேர் ஒன்றை தயார் செய்துள்ளனர்.

திருப்பூர் :

திருப்பூரில் 10 லட்சம் பேர் வசிக்கின்றனர். தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி உத்தரபிரதேசம், பீகார், ஒடிசா, மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலத்தவர் வேலை வாய்ப்புக்காக திருப்பூரில் தங்கியுள்ளனர். வெளிநாட்டை சேர்ந்தவர்களும் தொழிலாளர்களாக பணிபுரிகின்றனர். தொழிலாளர் போர்வையில் கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் பலர் மக்களோடு மக்களாக கலந்துள்ளனர்.இப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் மாநகர போலீசார், புதிய சாப்ட்வேர் ஒன்றை தயார் செய்தனர்.

தொழில்துறையினரின் ஒத்துழைப்போடு வெளி நாடு, மாநிலத்தை சேர்ந்த 28 ஆயிரம் பேர், புறநகரில், 7 ஆயிரம் பேர் என 35 ஆயிரம் பேரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டது. கொரோனா காரணமாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். பின் மீண்டும் வர துவங்கினர். இதனால் புள்ளிவிவரங்கள் முறையாக இல்லாமல் இருந்தது.

கடந்த மார்ச் மாதம் முதல்வர் மு.க. ஸ்டாலின், தொழில் நகரங்களில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் உள்ளூர் மற்றும் வெளிமாநில தொழிலாளர்களின் விபரங்களை வருவாய்த்துறை, போலீசார், தொழிலாளர் நலத்துறை இணைந்து விவரம் சேகரிக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து திருப்பூரில் போலீஸ் நிலையம் வாரியாக உள்ள நிறுவனங்கள், ஓட்டல், கடைகளில் வேலை செய்யும் வெளிமாநில, மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர் விவரம் சேகரிக்கும் பணியை மாநகர போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஒரு மாதமாக தொழில் நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகளில் வீட்டு உரிமையாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டு விவரங்களை சேகரித்து வருகின்றனர்.அதில் பெயர், பாலினம், வயது, பெற்றோர், மனைவி பெயர், செல்போன் எண், சொந்த மாநிலம், மாவட்டம், அடையாள சான்று, தங்களை அழைத்து வந்த ஏஜென்ட் குறித்த விவரம், பணி செய்யும் இடம், ஏற்கனவே அவர்கள் மீதுள்ள குற்ற வழக்கு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.

கடந்த 2 மாதம் முன்பு தொழிலாளர் நலத்துறையினரிடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி மாவட்டத்தில் பனியன் நிறுவனம் போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ள வெளிமாநிலங்களை சேர்ந்த 153 கான்ட்ராக்டர் விவரம் பெறப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூர் போலீஸ் கமிஷனர் பாபு கூறியதாவது:-

விவரம் சேகரிப்பு பணிக்கு விவரங்களை பதிவு செய்ய என்னென்ன விவரங்களை பெற வேண்டும், அதனுடன் ஆவணங்களை இணைக்கும் வகையில், படிவம் ஒன்று தயார் செய்யப்பட்டு அந்தந்த போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பனியன் நிறுவனம், வணிக நிறுவனங்கள், ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் வழங்கப்பட்டது.இதன் மூலம் வெளி மாநிலம், வெளி மாவட்டத்தை சேர்ந்த 20 ஆயிரம் பேரின் விவரம் சேகரிக்கப்பட்டது. இப்பணி தொடர்கிறது. ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் இதற்காக ஒரு பதிவேடு பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சேகரிக்கப்படும் விவரங்களை, சாப்ட்வேரில் பதிவேற்றம் செய்யும் பணி நடக்கிறது. அதுபோக படிவத்தில் இன்னும் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. இன்னும் வேறு எந்த வகையில் எல்லாம் விவரங்களை சேகரிக்கலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News