உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

திருப்பூர் மாநகரில் கடந்த 8 மாதத்தில் 61 பேர் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2022-08-14 04:45 GMT   |   Update On 2022-08-14 04:45 GMT
  • பாண்டி மீது கொலை முயற்சி, கூட்டுக் கொள்ளை, திருட்டு வழக்கு உள்பட 11 வழக்குகள் உள்ளது.
  • ரமேஷ் மீது ஒரு கூட்டு கொள்ளை வழக்கு உள்ளது.

திருப்பூர் :

திருப்பூர் ராயப்பண்டாரம் வீதியைச் சேர்ந்தவர் சங்கமேஸ்வரன். நிதி நிறுவன அதிபர். கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி இவருடைய வீட்டுக்குள் புகுந்த ஆசாமிகள் வீட்டில் இருந்தவர்களை கட்டி போட்டு கத்தியை காட்டி மிரட்டல் விடுத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து நெல்லை மாவட்டம் நாங்குநேரி மறுகால்குறிச்சியை சேர்ந்த கோகுலகிருஷ்ணன், வானுமாமலை, நல்ல கண்ணு, இசக்கி பாண்டி, ரமேஷ் ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இசக்கி பாண்டி மீது கொலை முயற்சி, கூட்டுக் கொள்ளை, திருட்டு வழக்கு உள்பட 11 வழக்குகள் உள்ளது. ரமேஷ் மீது ஒரு கூட்டு கொள்ளை வழக்கு உள்ளது. இவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் உத்தரவிட்டார்.

இதையடுத்து கோவை மத்திய சிறையில் உள்ள இசக்கி பாண்டி, ரமேஷ் ஆகியோரிடம் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு வழங்கப்பட்டது. திருப்பூர் மாநகரத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 61 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News