திருப்பூர், பெருமாநல்லூரில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை
- பி.என்.ரோட்டில் 5 இடங்களில் சாலையோரத்தில் நின்ற மரங்கள் முறிந்து விழுந்தது.
- திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
பெருமாநல்லூர் :
திருப்பூர் மாநகரில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன்காரணமாக பி.என்.ரோட்டில் 5 இடங்களில் சாலையோரத்தில் நின்ற மரங்கள் முறிந்து விழுந்தது. சாந்தி தியேட்டர் பின்புறம் உள்ள வீதியில் சாலையோர மரத்துக்கு அடியில் கார் நிறுத்தப்பட்டு இருந்தது. பலத்த காற்றுக்கு மரம் வேரோடு சாய்ந்து கார் மேல் விழுந்தது. இதில் கார் கண்ணாடி உடைந்து சேதமானது.
உடனடியாக திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு உதவி மாவட்ட அதிகாரி வீரராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மரத்தை வெட்டி அகற்றி காரை அப்புறப்படுத்தினார்கள். இதுபோல் பி.என்.ரோட்டில் சரிந்த மரங்களால் போக்குகுவரத்து பாதிக்கப்பட்டது. அந்த மரங்களையும் வெட்டி அகற்றினார்கள். இதுபோல் கொங்கு மெயின் ரோடு, திருநீலகண்டபுரம் பகுதிகளில் சாலையோரம் நின்ற மரங்கள் சரிந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் மற்றும் செங்கப்பள்ளி அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை 3 மணியில் இருந்து மழை கொட்டியது. அத்துடன் காற்றும் பலமாக வீசியது. இதனால் ஆங்காங்கே உள்ள குட்டைகளில் மழைநீர் நிரம்பியது. தொடர்ந்து குளிர் காற்றும் இதமாக வீசியது.