மின் கட்டண உயர்வால் ஜவுளி தொழில் பாதிக்கும் அபாயம்
- தொழில்கள் செய்வோருக்கு கூடுதல் செலவு ஏற்படும் என்பதால் கவலையடைந்துள்ளனர்.
- ஜவுளித் தொழில் பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.
திருப்பூர் :
தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் செய்வோருக்கு கூடுதல் செலவு ஏற்படும் என்பதால் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து லகு உத்யோக் பாரதி அமைப்பின் சோமனூர் பகுதி தலைவர் நாராயணசாமி கூறியதாவது:-
கோவை, திருப்பூர் மாவட்டத்தில் ஜவுளித் தொழில் பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. ஒருபுறம் பஞ்சு விலை உயர்வு, மறுபுறம் துணிக்கு உரிய விலை கிடைப்பது இல்லை. அதிக விலை கொடுத்து நூல்களை வாங்கி துணி உற்பத்தி செய்யும் போது ஆர்டர்கள் இல்லை எனக்கூறி வியாபாரிகள் குறைந்த விலைக்கே துணிகளை கொள்முதல் செய்கின்றனர்.இதனால் மில்களில் உற்பத்தி குறைக்கப்பட்டதால் விசைத்தறிகளும் இயங்குவதில்லை. தற்போது அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வால் ஒட்டு மொத்த ஜவுளி தொழிலும் முடங்கிவிடும். பல லட்சம் பேர் வேலை இழந்து தவிக்க வேண்டியது வரும். அதனால் விசைத்தறி மற்றும் ஜவுளித்தொழில் நலன் கருதி மின் கட்டண உயர்வை அரசு திரும்ப பெறவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.