உள்ளூர் செய்திகள்

சின்னாறு.

பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து குறைவால் சின்னாற்றுக்கு தீர்த்தம் எடுக்க செல்லும் பொதுமக்கள்

Published On 2023-06-26 09:38 GMT   |   Update On 2023-06-26 09:38 GMT
  • வெப்பத்தின் தாக்குதல் அதிகரித்து கடும் வறட்சி நிலவி வருகிறது.
  • வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் அச்சத்துடனே சென்று வரவேண்டி உள்ளது.

உடுமலை:

உடுமலையின் சுற்றுப்புற கிராமங்களில் கோவில் விழாக்களும், கும்பாபிஷேகமும் பரவலாக நடைபெற்று வருகிறது. இதற்காக கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் முதல் நிகழ்ச்சியாக திருமூர்த்திமலைக்கு தீர்த்தம் எடுக்க சொல்வது வழக்கம். ஆனால் இந்த வருடம் கோடை காலம் முடிவடைந்தும் தென்மேற்கு பருவமழை தொடங்கவில்லை.

மாறாக வெப்பத்தின் தாக்குதல் அதிகரித்து கடும் வறட்சி நிலவி வருகிறது.இதன் காரணமாக பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து குறைந்து விட்டது.இதனால் ஏமாற்றம் அடைந்த பக்தர்கள், பொதுமக்கள் உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதி உள்ள சின்னாற்றுக்கு தீர்த்தம் எடுக்க செல்கின்றனர்.

அதன் பின்பு குடங்களில் தீர்த்தம் எடுத்து வந்து கட்டளை மாரியம்மன் கோவிலில் வைத்து பூஜை செய்து பின்பு ஊர்வலமாக கிராமங்களுக்கு எடுத்துச் செல்கின்றனர்.ஆனால் கட்டளை மாரியம்மன் கோவிலுக்கு செல்வதற்கு ஞாயிறு,செவ்வாய், வியாழக்கிழமைகளில் மட்டுமே அனுமதி வழங்கப் படுகிறது.இதனால் அனுமதிக்கப்பட்ட நாட்களில் மட்டுமே பக்தர்களால் தீர்த்தம் எடுக்க முடிகிறது. பயண நேரம், வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் அச்சத்துடனே சென்று வரவேண்டி உள்ளது.

ஆனால் பஞ்சலிங்க அருவிக்கு செல்வதற்கு இதுபோன்று கட்டுப்பாடுகள் கிடையாது.எப்போது வேண்டுமானாலும் சென்று தீர்த்தம் எடுத்துக் கொண்டு வரலாம்.இதனால் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து அருவியில் நீர்வரத்து ஏற்பட்டால் விழாக்கள் மேலும் சிறப்பு அடையும் என்று பக்தர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News