உள்ளூர் செய்திகள்

திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய்.

தவறான தகவல்களை பதிவிடுவோரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் - திருப்பூர் மாவட்ட எஸ்.பி., எச்சரிக்கை

Published On 2023-03-06 04:58 GMT   |   Update On 2023-03-06 04:58 GMT
  • மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
  • மாவட்ட காவல்துறை சார்பில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் குறித்து தவறாக சித்தரித்து வெளியிட்டு பிரச்சினை ஏற்படுத்துவதை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் கூறியதாவது:-

வடமாநில தொழிலாளர்கள் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியவர்கள் மீது திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. டுவிட்டர், முகநூல், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டவர்கள் மீது இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 3 சமூக வலைதளங்களின் சட்டக்குழுவினருடன் ஆலோசனை நடத்தி, 3 பதிவுகளை அதில் இருந்து அகற்றுவதற்கு கோரிக்கை வைத்துள்ளோம்.

டுவிட்டரில் ஏற்கனவே அந்த பதிவு நீக்கப்பட்டுள்ளது. மற்ற 2 பதிவுகளை அகற்றுவதற்கு அதிகாரிகளுடன் பேசி வருகிறோம். பணம் சம்பாதிக்கும் நோக்கில் சிலர் சமூக வலைதளங்களில் அதிகமானோர் பார்ப்பதற்காக சில வதந்திகளை பரப்பி வருகின்றனர். அவர்களுடைய வங்கி கணக்குகளை முடக்குவதற்கும் நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம். இந்த பிரச்சினை தொடர்பாக 2 போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் 2 தனிப்படை அமைத்துள்ளோம். வடமாநில தொழிலாளர்களுக்காக மாவட்ட காவல்துறை சார்பில் ஏற்படுத்தப்பட்ட காவல் கட்டுப்பாட்டு எண்ணிற்கு 600-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன.

அதில் யாரும், யாரையும் தாக்கியது போன்ற அழைப்புகள் எதுவும் வரவில்லை. 70 சதவீத அழைப்புகள் பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் இருந்து வடமாநில தொழிலாளர்களின் உறவினர்களும், குடும்பத்தினரும் தொடர்பு கொண்டு திருப்பூரில் இதுபோன்று நடக்கிறதா என்று விளக்கம் கேட்கின்றனர்.

அவர்களுக்கு இந்தி தெரிந்த போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் 24 மணி நேரமும் தகவல்களை வழங்கி வருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News