உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

Published On 2023-08-15 10:08 GMT   |   Update On 2023-08-15 10:08 GMT
  • தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
  • 40 வயதுக்கு உள்பட்ட திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

திருப்பூா்:

திருப்பூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக காலிப் பணியிடங்களுக்கு தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம்.இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:-

திருப்பூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் ஆற்றுப்படுத்துநா், உதவியாளா் உடன் கூடிய தகவல் உள்ளீட்டாளா் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. இதில் ஆற்றுப்படுத்துநா் பணியிடத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகவியல், உளவியல், பொது சுகாதாரம், ஆற்றுப்படுத்துதலில் பட்டதாரி அல்லது முதுநிலை டிப்ளமோ ஆற்றுப்படுத்துதல் மற்றும் தொடர் பாடல் பிரிவில் இளநிலை அல்லது முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

உதவியாளா் உடன் கூடிய தகவல் உள்ளீட்டாளா் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் இருந்து பிளஸ் 2 அல்லது அதற்கு சமமான வாரியத்தில் இருந்து பட்டயப்படிப்பு, கணினி இயக்குவதில் சான்றிதழ் பெற்றிருப்பதுடன், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

முன் அனுபவம் உள்ளவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 40 வயதுக்கு உள்பட்ட திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். ஆகவே, மேற்கண்ட தகுதியுடைய விண்ணப்பதாரா்கள் அனைத்து கல்வி சான்று நகல்கள், அனுபவச்சான்று மற்றும் புகைப்படத்துடன் வரும் செப்டம்பா் 2ந்தேதிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அறை எண் 305, 7 வது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருப்பூா். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2971198 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News