பல்லடம் அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி
- ஊராட்சிக்கு உட்பட்ட ஆழ்துளை கிணறு மின் மோட்டார் இயங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது
- உயர் அழுத்த மின்சார கம்பியை தொட்டதில் தூக்கி வீசப்பட்டு உடல் கருகி பெரியசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் நாச்சிபாளையம் ஊராட்சி புள்ளியாண்டம்பாளையத்தை சேர்ந்த சடையப்பன் என்பவரது மகன் பெரியசாமி (வயது 44). இவர் அந்த பகுதியில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று நாச்சிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆழ்துளை கிணறு மின் மோட்டார் இயங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அங்கு அவருடன் குடிநீர் வினியோகம் செய்யும் பணியாளர் ஒருவரும் உடன் சென்றுள்ளார்.
இந்தநிலையில் டிரான்ஸ்பார்மரை நிறுத்திவிட்டு எலக்ட்ரீசியன் பெரியசாமி மின் கம்பத்தில் ஏறி உள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியை தொட்டதில் தூக்கி வீசப்பட்டு உடல் கருகி பெரியசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவினாசி பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பெரியசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மின்சார வாரிய ஊழியர்கள் கவனத்திற்கு வராமல் தாமாக சென்று பழுதை சரி செய்ய மின்கம்பத்தில் ஏறி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.