உள்ளூர் செய்திகள்

 பள்ளிவாகனத்தின் சக்கரம் ரோட்டில் புதையுண்ட காட்சி.

திருப்பூர் காட்டுவலவு பகுதியில் சேறும் சகதியுமான சாலையில் சிக்கிய தனியார் பள்ளி பஸ்

Published On 2022-09-15 08:09 GMT   |   Update On 2022-09-15 08:09 GMT
  • ரோட்டின் நடுவே தோண்டப்பட்ட குழிகளை முறைகாக மூடாமல் அறைகுறையாக மண்ணைக்கொட்டப்பட்டுள்ளது
  • ரோட்டை பயன்படுத்தும் வாகனஓட்டிகள் தட்டுத்தடுமாறி விபத்தில் சிக்கித்தவித்து வந்தனர்.

திருப்பூர் :

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது .இதன் ஒருபகுதியாக திருப்பூர் சந்தைப்பேட்டை அருகேஉள்ள காட்டுவலவு பகுதியில் பாதாள சாக்கடை கட்டும் பணி நடைபெற்றுவருகிறது .இதற்காக ரோட்டின் நடுவே தோண்டப்பட்ட குழிகளை முறைகாக மூடாமல் அறைகுறையாக மண்ணைக்கொட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து மிகவும் பாதிப்படைந்துள்ளது.

நாள்தோறும் அந்த ரோட்டை பயன்படுத்தும் வாகனஓட்டிகள் தட்டுத்தடுமாறி விபத்தில் சிக்கித்தவித்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை தாராபுரத்தில் உள்ள தனியார் பள்ளியின் பஸ் ஒன்று மாணவர்களை ஏற்றிச்செல்வதற்காக திருப்பூர் காட்டுவலவு பகுதிக்கு வந்தது .அப்போது ரோட்டின் நடுவே சேறும் சகதியுமாக இருந்த ரோட்டை கடந்து செல்ல முயன்றபோது எதிர்பாராத விதமாக பள்ளிவாகனத்தின் சக்கரம் ரோட்டில் புதையுண்டது. அதிர்ஷ்டவசமாக எவ்வித விபத்தும் ஏற்படாமல் மாணவர்கள் உயிர் தப்பினர்.

இதுகுறித்து தகவலறிந்த தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குழியில் சிக்கிய பள்ளி வாகனத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பிற்குள்ளானது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், காட்டுவலவு மெயின் ரோட்டில் ஸ்மார்ட்சிட்டி பணிக்காக தோண்டிவிட்டு அதை முறையாக மூடாமல் தொழிலாளர்கள் மெத்தனமாக விட்டுச்சென்றுள்ளனர். இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு இருசக்கர வாகன ஓட்டிகள் காயமடைந்து வீடு திரும்பும் நிலை இருந்து வருகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பழுதடைந்த நிலையில் உள்ள ரோட்டை சீரமைத்து கொடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News