அரசு கலை கல்லூரி அமைக்க இடம் தேர்வு
- வருவாய்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்
- புதியதாக அமைக்கப்பட்ட தரை மட்ட நீர் தேக்க தொட்டியை சோதனை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அருகே பச்சூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என தமிழக முதல்- அமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யும் பணியில் வருவாய்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடம் கட்ட கே.பந்தாரப்பள்ளி, மல்லபள்ளி மற்றும் பணியாண்டப்பள்ளி ஆகிய கிராமங்களில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து நாட்டறம்பள்ளி மற்றும் சந்திரபுரம் ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் புதியதாக அமைக்கப்பட்ட தரை மட்ட நீர் தேக்க தொட்டியையும் மாவட்ட வருவாய் அலுவலர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது உடன் நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார், மண்டல துணை தாசில்தார் நடராஜன், வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் சந்தீப் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.