- வட மாநில வாலிபர் கைது
- போலீசார் விசாரணை
வாணியம்பாடி:
ஒடிசாவில் இருந்து திருப்பத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டத்திற்கு கஞ்சா கடத்தி வருவதாக மத்திய குற்ற புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் வாணியம்பாடி மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் மற்றும் மத்திய புலனாய்வு பிரிவு குழுவினர் இணைந்து ஆம்பூர் தற்காலிக பஸ் நிலையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் நபர் ஒருவர் பையுடன் சுற்றித்திரிந்தார்.
அவரைப் பிடித்து விசாரணை செய்ததில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரசாத்மாஜி (வயது 37) என்பதும், அம்மாநிலத்தில் இருந்து ஈரோடு மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது.
அவரிடமிருந்து 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.