உள்ளூர் செய்திகள்

அட்டகாசத்தில் ஈடுபட்ட காட்டு யானை

தண்ணீர் என நினைத்து சாராயத்தை குடித்து அட்டகாசம் செய்த காட்டுயானை

Published On 2022-06-10 07:21 GMT   |   Update On 2022-06-10 07:21 GMT
  • பேரணாம்பட்டு பங்களாமேடு பகுதியில் உள்ள மன வளர்ச்சி குன்றியவர்களுக்கான பள்ளியில் யானை நுழைந்தது.
  • சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் போராடி யானையை காட்டுப்ப குதிக்குள் விரட்டியடித்தனர்.

பேரணாம்பட்டு:

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள மோர்தானா காப்புக்காடு பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆண் யானை ஒன்று சுற்றித் திரிந்தது. குண்டக்கல் காப்புக்காடு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான வனப்பகுதிக்குள் நுழைந்தது.

அங்குள்ள பால் சுனை, மாமரத்து பள்ளம் ஓடை மற்றும் கங்கா ஓடை உள்ளது. இந்த ஓடைகளில் ஆண்டுதோறும் வற்றாத தண்ணீர் வந்து கொண்டே இருக்கும். இதனைப் பயன்படுத்தி அங்கு சாராய வியாபாரிகள் சாராயம் காய்ச்சி வருகின்றனர். அதற்காக பானைகளில் ஊறல் வைத்திருந்தனர். அதனை மிதித்து நாசம் செய்த யானை தண்ணீர் என நினைத்து சாராயத்தை குடித்துள்ளது. இதனால் மதம் பிடித்ததுபோல் யானை பிளிறியபடி சுற்றித் திரிந்தது. யானையைக் கண்ட சாராய வியாபாரிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

பின்னர் பேரணாம்பட்டு பங்களாமேடு பகுதியில் உள்ள மன வளர்ச்சி குன்றியவர்களுக்கான பள்ளியில் யானை நுழைந்தது. அங்கு யானை பிளிரியப்படி இருந்தது.

இதனால் பள்ளியில் இருந்தவர்கள் பயத்தில் அஞ்சி நடுங்கினர். ஆனால் யானை அவர்களை ஒன்றும் செய்யாமல் மீண்டும் குடியாத்தம் நெடுஞ்சாலை வழியாக வனத்துறை ஓய்வு விடுதிக்குள் வந்தது.

அப்போது வனச்சரகர் சதீஷ்குமார் வனக்காவலர் ரவி காப்பாளர் வெங்கடேசன் தூங்கிக்கொண்டு இருந்தனர். யானையின் பிளிறல் சத்தம் கேட்டு வெளியே வந்தவர்கள் பொதுமக்கள் உதவியுடன் பட்டாசு வெடித்து யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் போராடி யானையை காட்டுப்ப குதிக்குள் விரட்டியடித்தனர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

Tags:    

Similar News