கோப்பு படம்.
வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் தொடரும் போஸ்டர் யுத்தம்
- வீரமுத்தரைய முன்னேற்ற சங்கம் சார்பாக வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தை சுற்றிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
- அரசு அலுவலக அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கோடி கணக்கில் பணத்தை பெற்று வருகின்றனர்.
வடமதுரை:
வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடுகள் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த சில நாட்களாக நேர்மையான அதிகாரிகளை பணியமர்த்த வேண்டும் எனக்கூறி பல்வேறு அமைப்பினர் மாறி மாறி போஸ்டர் யுத்தம் நடத்தி வருகின்றனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் வீரமுத்தரைய முன்னேற்ற சங்கம் சார்பாக வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தை சுற்றிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் தமிழக அரசே பழனி பதிவு மாவட்டத்தை சீர்குலைக்கும் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். பழனி பதிவு மாவட்டத்திற்கு உள்பட்ட 9 சார்பதிவாளர் அலுவலகங்களிலும் இடைத்தரகர்கள் மூலம் முறைகேடாக வசூல்வேட்டை நடத்தி பத்திர பதிவு நடைபெற்று வருகிறது.
மேலும் சொத்தில் உள்ள வில்லங்கங்களை மறைத்து வில்லங்க சான்று வழங்கப்படுகிறது. அரசு அலுவலக அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கோடி கணக்கில் பணத்தை பெற்று வருகின்றனர். எனவே அவர்களை பணிநீக்கம் செய்து குற்றவழக்கில் பதிவு செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளன.
தொடர்ந்து இப்பகுதியில் ஒட்டப்படும் போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.