உள்ளூர் செய்திகள்

நார்வே நாட்டுல வேலை இருக்கு இளம்பெண்ணுக்கு போலி விசா கொடுத்து மோசடி செய்தவர் கைது

Published On 2022-08-10 09:00 GMT   |   Update On 2022-08-10 09:00 GMT
  • கடந்த 2020-ம் ஆண்டு எனது பேஸ்புக் பக்கத்தை பார்த்த போது விளம்பரம் ஒன்று வந்தது.
  • நான் விசாவை சரிபார்த்த போது அது போலியானது என்பது தெரிய வந்தது.

கோவை:

கோவை சூலூர் அருகே உள்ள முத்துக்கவுண்டன்புதூரை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி தாரணி (வயது 27). இவர் காட்டூர் போலீசில் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.

அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

நான் கம்யூட்டர் என்ஜினீயரிங் படித்து முடித்து உள்ளேன். கடந்த 2020-ம் ஆண்டு எனது பேஸ்புக் பக்கத்தை பார்த்த போது விளம்பரம் ஒன்று வந்தது. இதில் நார்வே நாட்டில் வேலை இருப்பதாக கூறப்பட்டு இருந்தது. இதனையடுத்து நான் அதில் உள்ள செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினேன்.

அதன் பின்னர் சித்தாபுதூர் வி.கே.கே. மேனன் ரோட்டில் செயல்பட்டு வரும் நிறுவனத்தில் இருந்து மேலாண்மை இயக்குனர் முருகன் பேசுவதாகவும், அலுவலகத்துக்கு நேரில் வருமாறு கூறினார். இதனையடுத்து நார்வே நாட்டில் வேலை கிடைக்க போகிறது என்ற மகிழ்ச்சியில் நானும் எனது கணவரும் அந்த அலுவலகத்துக்கு சென்றோம்.

அங்கு இருந்த முருகன் விசா, விமான டிக்கெட் உள்பட ரூ.6 லட்சம் செலவாகும் என கூறினார். இதனையடுத்து நான் முன்பணமாக ரூ.10 ஆயிரம் கொடுத்தேன். அதன் பின்னர் அவர் கொடுத்த கூகுள்பே எண்ணுக்கு பல்வேறு பரிவர்த்தனைகளில் ரூ.5 லட்சம் அனுப்பி வைத்தேன். அதன் பின்னர் முருகன் நார்வே நாட்டிக்கு செல்வதற்கு விசா கொடுத்தார். விமான டிக்கெட் பின்னர் வரும் என தெரிவித்தார்.

நான் விசாவை சரிபார்த்த போது அது போலியானது என்பது தெரிய வந்தது. அதன் பின்னர் விசாரித்த போது முருகன் என்னை போல 10-க்கு மேற்பட்டவர்களிடம் இதே போல நார்வே நாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி மோசடி செய்தது தெரிய வந்தது. எனவே நான் கொடுத்த ரூ.5 லட்சத்து 10 ஆயிரம் பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி இளம்பெண்ணிடம் மோசடி செய்த முருகனை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

Tags:    

Similar News