ஆத்தூர் அருகே வறண்ட நிலையில் காணப்படும் தாமிரபரணி ஆற்றின் கடைசி பாலப்பகுதி
- ஆத்தூரில் முக்காணி -ஆத்தூரை இணைக்கும் தாமிரபரணி ஆற்றின் கடைசி பாலம் உள்ளது.
- இதையடுத்து விவசாயிகள் அதிக ஆழத்தில் தண்ணீரை மோட்டார் மூலம் எடுத்து பாசனம் செய்து வருகின்றனர்.
ஆத்தூர்:
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை வளமாக்கும் தாமிரபரணி ஆறு தென் மாவட்டத்திலேயே உற்பத்தியாகி தென் மாவட்டத்திலேயே கடலில் கலக்கும் பெருமை பெற்றது.
கடைசி பாலப்பகுதி
இந்த ஆறு நெல்லை மாவட்டம் பொதிகை மலையில் உற்பத்தியாகி தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புன்னக்காயல் கடலில் கலக்கிறது. ஆத்தூரில் முக்காணி -ஆத்தூரை இணைக்கும் தாமிரபரணி ஆற்றின் கடைசி பாலம் உள்ளது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் போது இந்த பாலத்திற்கு மேல் வெள்ளம் ஓடி தூத்துக்குடி மாவட்டத்தை பரபரப்பாக்கும். அப்போது தூத்துக்குடி- திருச்செந்தூர் போக்குவரத்து நிறுத்தப்படும்.
இந்த பாலப்பகுதியில் தற்போது தண்ணீர் முழுமையாக வற்றி தரைகள் வெளியில் தெரிகிறது. இதனால் ஆத்தூர் சுற்று வட்டாரங்களில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதையடுத்து விவசாயிகள் அதிக ஆழத்தில் தண்ணீரை மோட்டார் மூலம் எடுத்து பாசனம் செய்து வருகின்றனர்.
விவசாயிகள் எதிர்பார்ப்பு
மேலும் தண்ணீர் அதிகமான அளவு கீழ் செல்லும் போது அருகில் உள்ள கடல்நீர் ஊருக்குள் வந்து நிலத்தடி நீர் உப்பாக மாற வாய்ப்பு உள்ளது.
இதற்கிடையே தற்போது மழை காரணமாக அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் குடிநீர் தேவைக்கு மட்டுமல்லாமல் விவசாயிகளும் பாபநாசம் அணையில் இருந்து தாமிரபரணி ஆற்றிற்கு தண்ணீர் திறப்பதை எதிர்பார்த்து உள்ளனர்.