உள்ளூர் செய்திகள்

புதிய பாலம் கட்டும் பணியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்த போது எடுத்தபடம்.

மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை தி.மு.க. அரசு தான் நிறைவேற்றி வருகிறது -அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு

Published On 2022-06-20 08:52 GMT   |   Update On 2022-06-20 08:52 GMT
  • தமிழக மக்களின் கோரிக்கைகளை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார்.
  • முதல்-அமைச்சருக்கு நாம் என்றும் எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டும் என அமைச்சர் பேசினார்.

உடன்குடி:

உடன்குடி அருகே உள்ள மாதவன்குறிச்சி அமராபுரம் கிராமங்கள் இடையே ரூ.8 கோடியில் உயர் மட்ட இணைப்பு பாலம் அமைக்கும் பணியின் தொடக்க விழா நடந்தது.

மழைக்காலங்களில் இப்பாலத்தில் மழை நீர் பலமாதம் தேங்கி நிற்பதால் இரு கிராமங்களுக்கு இடையே போக்குவரத்து தடைபட்டு மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.

இந்த தரைபாலத்தில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என இரு கிராம மக்களும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை வைத்ததன் பேரில் ரூ. 8 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் அமைக்க அமைச்சர் நடவடிக்கை எடுத்தார்.

இதற்கான தொடக்க விழாவிற்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், தலைமை தாங்கினார். மாதவன் குறிச்சி பஞ்சாயத்து தலைவர் சேர்மத்துரை, துணைத் தலைவர் கருப்பசாமி, யூனியன் கவுன்சிலர் ஜெயகமலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்று பாலம் அமைக்கும் பணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

சுமார் 10 வருடங்களாக இந்த தரை மட்ட பாலத்தை உயர் மட்டபாலமாக அமைக்க வேண்டும் என்று இருகிராம மக்களும்கோரிக்கை வைத்தனர்.அப்போது நான் எதிர்கட்சிஎம்.எல்.ஏ.வாக இருந்ததால் எனது கோரிக்கையை நிறைவேற்றவில்லை.

தரைமட்ட பாலத்தில் போக்குவரத்து தடைபட்டுகிராம மக்களும் கடும் அவதிப்பட்டனர். அவசர தேவைக்கு கூட சுமார் 5 கிலோமீட்டர் தூரம் சுற்றிசெல்ல வேண்டிய அவலநிலை இருந்தது. அப்படி இருந்தும் எனது கோரிக்கை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தது .

தற்போது தி.மு.க. அரசு அமைந்தவுடன் இக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை எல்லாம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது நிறைவேற்றி வருகிறார்.

இப்படிப்பட்ட முதல்-அமைச்சருக்கு நாம் என்றும் எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் தி.மு.க.மாநில மாணவரணி துணை செயலர் உமரிசங்கர், உடன்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செழியன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஜெசிபொன்ராணி,

உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவி மீரா சிராஜூதீன், உடன்குடி பேரூராட்சி துணைத்தலைவர் மால்ராஜேஷ், ஊராட்சி மன்றத் தலைவர்கள் சேர்மத்துரை, பாலமுருகன், காமராஜ், கமலம், தி.மு. க. நிர்வாகிகள் கனகராஜ், ஜெயப்பிரகாஷ், தன்ராஜ், சேர்மத்துரை உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News