கடையம் அருகே பஞ்சாயத்து அலுவலகத்தை தலைவர் பூட்டு போட்டு பூட்டி சென்றதால் பரபரப்பு
- பஞ்சாயத்து தலைவர் மாரியப்பன் அவரது அறை மற்றும் பஞ்சாயத்து செயலாளர் அறையை பூட்டு போட்டு பூட்டி சென்றுள்ளார்.
- மனு கொடுக்க வந்த பொதுமக்கள் பஞ்சாயத்து அலுவலகம் பூட்டி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
கடையம்:
தென்காசி மாவட்டம் கடையம் யூனியனுக்கு உட்பட்ட திருமலையப்பபுரம் ஊராட்சியின் கீழ் 6 வார்டுகள் செயல்பட்டு வரும் நிலையில் நேற்று கூட்டம் நடைபெற இருப்பதாக பஞ்சாயத்தில் இருந்து வார்டு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
அதன்படி வார்டு உறுப்பினர்கள் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது பஞ்சாயத்து தலைவர் மாரியப்பன் திடீரென அவரது அறை மற்றும் பஞ்சாயத்து செயலாளர் அறையையும் பூட்டு போட்டு பூட்டி சென்றுள்ளார்.
இதனால் மனு கொடுக்க வந்த பொதுமக்கள் பஞ்சாயத்து அலுவலகம் பூட்டி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து வார்டு உறுப்பினர்கள் கூறுகையில், பஞ்சாயத்து தலைவர் மாரியப்பன் திடீரென புதிய பூட்டுகளை வாங்கி வந்து அறைகளை பூட்டி சென்றுள்ளார். இதனால் இன்று மனுக்கொடுக்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர்.
இதுகுறித்த முதற்கட்ட விசாரணையில், பஞ்சாயத்து தலைவர் மாரியப்பனுக்கும், பஞ்சாயத்து செயலாளர் வேலுச்சாமிக்கும் இடையே ஆவணத்தில் கையொப்பம் இடாமல் இருப்பதை தலைவரிடம் தெரிவிக்காதது தொடர்பாக கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது.