உள்ளூர் செய்திகள்

ஜப்தி செய்யப்பட்ட அரசு பஸ்.

விபத்தில் வாலிபர் சாவு: நஷ்டஈடு வழங்காத அரசு பஸ் ஜப்தி

Published On 2023-02-25 08:40 GMT   |   Update On 2023-02-25 08:40 GMT
சந்துரு (வயது 20). மோட்டார் சைக்கிளில்திருநாவலூர் சென்று கொண்டிருந்த போது,பின்னால் வந்த அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சந்துரு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடலூர்:

பண்ருட்டி அருகே உள்ள வீரப்பெருமாநல்லூர் புதுக்காலனியை சேர்ந்தவர் சங்கர் மகன் சந்துரு (வயது 20). இவர் கடந்த 22.10.2019 அன்று மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை காரணமாக திருநாவலூர் சென்று கொண்டிருந்தார்.அப்போது பின்னால் வந்த விழுப்புரம் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சந்துரு, சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையே விபத்தில் உயிரிழந்த சந்துருவின் தந்தை மற்றும் சகோதரர் நஷ்டஈடு கேட்டு, கடலூர் மூத்த வக்கீல் சிவமணி, வக்கீல்கள் சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோர் மூலம் கடலூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் தொடுத்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, விழுப்புரம் போக்குவரத்து கழகம் சந்துரு குடும்பத்திற்கு நஷ்டஈடாக ரூ.10 லட்சத்து 15 ஆயிரத்து 680 வழங்க வேண்டும் என கடந்த 24.2.2021 அன்று உத்தரவிட்டார். இருப்பினும் நஷ்டஈடு தொகை வழங்காததால், நீதிமன்றத்தில் நிறைவேற்று மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை கடந்த 20.12.2022 அன்று விசாரித்த கடலூர் கூடுதல் மாவட்ட நீதிபதி சுபா அன்புமணி, சந்துரு குடும்பத்திற்கு வட்டியுடன் ரூ.11 லட்சத்து 77 ஆயிரத்து 740 நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில் விழுப்புரம் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பஸ்சை ஜப்தி செய்யவும் உத்தரவிட்டார். இருப்பினும் நஷ்டஈடு வழங்காததால், நேற்று காலை கடலூர் பஸ் நிலையத்திற்கு வந்த விழுப்புரம் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான அரசு பஸ்சை, கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

Tags:    

Similar News