உள்ளூர் செய்திகள்

கோவையில் வாலிபரை ஆட்டோவில் கடத்தி பணம்-செல்போன் பறிப்பு

Published On 2023-04-25 09:10 GMT   |   Update On 2023-04-25 09:10 GMT
  • மகேஷ்வரன், ஆட்டோ டிரைவரிடம், ஏன் ஆட்டோவை வேகமாக ஓட்டினாய் என கேட்டார்.
  • பையில் வைத்திருந்த ரூ.11,300 பணம் மற்றும் செல்போனை பறித்து விட்டு தப்பி சென்றனர்.

கோவை,

கோவை கணபதி அருகே விநாயகர் கோவில் பகுதியை சேர்ந்தவர் மகேஷ்வரன் (வயது 43). இவர் ரேஸ்கோர்சில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று, இவர் கணபதி பாரதி நகரில் உள்ள வார சந்தையில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக ஆட்டோவை ஓட்டிச் சென்ற டிரைவர், எதிர்பாரபத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதினார்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற 45 வயது பெண் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதனை கண்ட மகேஷ்வரன், ஆட்டோ டிரைவரிடம், ஏன் ஆட்டோவை வேகமாக ஓட்டி வந்தாய் என கேட்டார். இதில் கோபம் அடைந்த ஆட்டோ டிரைவர் அங்கிருந்து சென்று விட்டார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து ஆட்டோ டிரைவர், 4 பேர் கும்பலுடன் அங்கு சென்றார். இதையடுத்து அங்கு நின்று கொண்டிருந்த மகேஷ்வரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவரை ஆட்டோவில் கடத்தி சென்று மணியகாரம்பாளையம் சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி அருகே கணபதிக்கு அழைத்துச் சென்றனர். இதனையடுத்து 5 பேரும் சேர்ந்து அவரை தாக்கினர்.

பின்னர் அவர் பையில் வைத்திருந்த ரூ.11,300 பணம் மற்றும் செல்போனை பறித்து விட்டு தப்பி சென்றனர். இதயைடுத்து மகேஷ்வரன் நண்பரின் உதவியுடன் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றார்.

பின்னர் இதுகுறித்து அவர் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் உள்பட 5 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News