மாதாபட்டினத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை- தமிழ் ஆசிரியர் கைது
- பள்ளி நிர்வாகம் கடந்த மாதம் அருள்செல்வனை பணியிடைநீக்கம் செய்தது.
- ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பள்ளி நிர்வாகம் சார்பில் புகார் அளித்தனர்.
தென்காசி:
ஆலங்குளம் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கரும்பனூரை சேர்ந்தவர் அருணாச்சலம் மகன் அருள்செல்வன் (வயது 51). இவர் தற்போது ஆலங்குளம்-தென்காசி சாலையில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார். அருள்செல்வன் பூலாங்குளம் அருகே மாதாபட்டினத்தில் அமைந்திருக்கும் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் அருள்செல்வன் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக பள்ளி நிர்வாகத்துக்கு பல்வேறு புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பள்ளி நிர்வாகம் கடந்த மாதம் அருள்செல்வனை பணியிடைநீக்கம் செய்தது.
இதைத்தொடர்ந்து ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பள்ளி நிர்வாகம் சார்பில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் நேற்று அருள்செல்வனை போக்சோ சட்டத்தில் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.