உள்ளூர் செய்திகள்

பொங்கல் பண்டிகை கொண்டாட மாமியார் வீட்டிற்கு சென்ற வாலிபர் திடீர் மரணம்

Published On 2023-01-16 04:54 GMT   |   Update On 2023-01-16 04:54 GMT
  • பொங்கல் பண்டிகைக்காக யுகேஷ், தனது மனைவியுடன் பொலவபாளையத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்றார்.
  • இரவில் கழிப்பறைக்கு சென்ற யுகேஷ் வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை என தெரிகிறது.

ஈரோடு:

ஈரோடு, சடையம் பாளையம், பகவதியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் யுகேஷ் (28). இவருக்கும் கோபியை அடுத்துள்ள பொலவபாளையம் பகுதியை சேர்ந்த கலைவாணி (23) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்கு முன்னரே 2 முறை ஏற்பட்ட வாகன விபத்தில், யுகேஷுக்கு காலிலும், முதுகு தண்டுவடத்திலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இதனால் அவருக்கு அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்காக யுகேஷ், தனது மனைவியுடன் பொலவபாளையத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்றார்.

இரவில் கழிப்பறைக்கு சென்றவர் வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை என தெரிகிறது. இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கழிப்பறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மயங்கிய நிலையில் யுகேஷ் கிடந்துள்ளார்.

இதையடுத்து, நம்பியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே யுகேஷ் இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து வரப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News