உள்ளூர் செய்திகள்

செல்போனில் பேசியபடி சென்ற வாலிபர் 3-வது மாடியில் இருந்து விழுந்து பலி

Published On 2022-12-01 07:22 GMT   |   Update On 2022-12-01 07:22 GMT
  • செல்வமணி இரவு நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்ததாக தெரிகிறது.
  • செல்வமணி கட்டிடத்தின் 3-வது தளத்துக்கு படிக்கட்டு வழியாக நடந்து சென்றார்.

பொன்னேரி:

சென்னை, கானத்தூர் அடுத்த உத்தரண்டி ஜிகு கடற்கரை சாலையில் புதிதாக அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

இங்கு அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த செல்வமணி (வயது 23) என்பவர் அங்கேயே தங்கி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் செல்வமணி இரவு நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்ததாக தெரிகிறது. பின்னர் அவர் கட்டிடத்தின் 3-வது தளத்துக்கு படிக்கட்டு வழியாக நடந்து சென்றார். அப்போது செல்வமணி செல்போனில் பேசியபடி சென்றதாக தெரிகிறது. திடீரென நிலைதடுமாறிய அவர் 3-வது மாடியில் இருந்து லிப்ட் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட காலி இடத்தில் தவறி விழுந்தார்.

இதில் பலத்த காயம் அடைந்த செல்வமணி உயிருக்கு போராடினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற தொழிலாளர்கள் அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி செல்வமணி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கானத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News