உள்ளூர் செய்திகள்

நெல்லையில் சிறையில் இருந்து வந்த அன்றே என்ஜினீயர் வீட்டில் திருடிய வாலிபர் கைது

Published On 2022-10-19 09:30 GMT   |   Update On 2022-10-19 09:30 GMT
  • திருட்டு சம்பவம் நடந்த வீட்டின் அருகே உள்ள ஆஸ்பத்திரியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
  • வாலிபர் ஒருவர் ரெஜின் ராகுலின் மொபட்டை திருடிக்கொண்டு செல்வது தெரியவந்தது.

நெல்லை:

நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சேவியர் காலனியை சேர்ந்தவர் ரெஜின் ராகுல் (வயது 36). இவர் பொதுப்பணித்துறையில் உதவி என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.

கடந்த 11-ந்தேதி மாலை அவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சாத்தான்குளத்தில் நடைபெற்ற ஒரு திருமண வீட்டிற்கு சென்றனர். மறுநாள் காலை வீட்டு வேலை செய்வதற்காக பெண் ஊழியர் ஒருவர் சேவியர்காலனியில் உள்ள வீட்டுக்கு வந்தபோது கதவு உடைக்கப்பட்டு டேப்லட் மற்றும் ஒரு மொபட் திருட்டு போயிருந்தது.

இதுதொடர்பாக மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஷிதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

திருட்டு சம்பவம் நடந்த வீட்டின் அருகே உள்ள ஆஸ்பத்திரியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் வாலிபர் ஒருவர் ரெஜின் ராகுலின் மொபட்டை திருடிக்கொண்டு செல்வது தெரியவந்தது.

அதனை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த நபர் உவரியை சேர்ந்த பெஞ்சமின்(33) என்பது தெரியவந்தது. இவர் ஏற்கனவே ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 11-ந்தேதி காலையில் தான் பாளை மத்திய சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

அதன் பின்னர் புதிய பஸ் நிலையத்திற்கு வந்த பெஞ்சமின் மாலையில் சேவியர் காலனியில் ஆட்கள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு, அதில் ரெஜின் ராகுல் வீட்டில் திருட்டு சம்பவத்தை நிகழ்த்தி உள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News