உள்ளூர் செய்திகள்

கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட 16 வயது சிறுமி பலி- கர்ப்பத்திற்கு காரணமான வாலிபர் கைது

Published On 2023-07-05 04:20 GMT   |   Update On 2023-07-05 04:20 GMT
  • டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மாத்திரையை விற்பனை செய்த மருந்துக்கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
  • சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமானவர் யார்? என்று போலீசார் விசாரித்தனர்.

திருப்பூர்:

திருப்பூர் முத்தணம்பாளையம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி கர்ப்பமானார். இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய பெற்றோர் மாணவியின் எதிர்காலம் கருதி ரகசியமாக கருவை கலைக்க முடிவு செய்தனர்.

இதற்காக கருக்கலைப்பு மாத்திரையை மருந்து கடையில் இருந்து வாங்கி வந்து சிறுமிக்கு கொடுத்தனர். இந்த மாத்திரையை சாப்பிட்ட சிறுமிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சிறுமியை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ரத்தப்போக்கு அதிகமாகி சிறுமி இறந்தார்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மாத்திரையை விற்பனை செய்த மருந்துக்கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இதற்கிடையில் சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமானவர் யார்? என்று போலீசார் விசாரித்தனர். விசாரணையில் கோவில் வழியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அதே பகுதியை சேர்ந்த 18 வயது வாலிபர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தேடுவதை அறிந்த அந்த வாலிபர் ராமேசுவரம் சென்று தனது உறவினர் வீட்டில் பதுங்கிக்கொண்டார். உடனே போலீசார் அங்கு சென்று அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து திருப்பூர் அழைத்து வந்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News