உள்ளூர் செய்திகள்

போடி அருகே திருமணம் பிடிக்காததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

Published On 2022-12-29 10:10 IST   |   Update On 2022-12-29 10:10:00 IST
  • தனது வீட்டு மாடியில் இருந்த அர்ச்சனா நீண்ட நேரமாகியும் கீழே வரவில்லை.
  • சந்தேகமடைந்த அர்ச்சனா குடும்பத்தினர் மேலே சென்று பார்த்த போது உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தார்.

மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் போடி எஸ்.எஸ்.புரம் அருகே உள்ள சடையாண்டி நகரைச் சேர்ந்தவர் முருகன் (வயது 52). இவருக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். முருகன் துணி வியாபாரம் செய்து வருகிறார்.

இவரது 2-வது மகள் அர்ச்சனா (23). பி.காம் படித்து முடித்த இவர் வங்கியில் சில மாதங்கள் வேலை பார்த்தார். அதன் பிறகு வேலையின்றி வீட்டிலேயே இருந்து தனது தந்தை செய்யும் தொழிலுக்கு உதவியாக இருந்து வந்துள்ளார்.

இதனால் தனது மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ய முருகன் முடிவு செய்தார். இது குறித்து அவரிடம் கேட்ட போது உங்கள் விருப்பம் போல் செய்யுங்கள் என தெரிவித்துள்ளார். ஆனால் அதன் பிறகு கலகலப்பாக யாருடனும் பேசாமல் தனிமையில் இருந்து வந்துள்ளார்.

நேற்று மாலை தனது வீட்டு மாடியில் இருந்த அர்ச்சனா நீண்ட நேரமாகியும் கீழே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் மேலே சென்று பார்த்த போது உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தார்.

அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போடி டவுன் போலீஸ் நிலையத்தில் முருகன் புகார் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் ராமலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

திருமண ஏற்பாடுகள் பிடிக்காததால் அர்ச்சனா தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகமடைந்துள்ளனர். இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News