உள்ளூர் செய்திகள்

கணவர் திட்டியதால் 2 வயது பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்

Published On 2023-10-25 07:01 GMT   |   Update On 2023-10-25 07:01 GMT
  • வீட்டிற்கு சென்று மயங்கிய நிலையில் இருந்த மனைவி மற்றும் குழந்தையை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.
  • சம்பவம் குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை:

கோவை கோவில்பாளையம் அருகே உள்ள கொங்குநகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி லஷிகா (வயது 23). இவர்களுக்கு கேசின்யா என்ற 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.

சம்பவத்தன்று லஷிகா தனது கணவரிடம் குழந்தையை சலூன் கடைக்கு அழைத்து சென்று முடிவெட்டி விட்டு வரும்படி கூறினார். அதற்கு கார்த்திகேயன் குழந்தைக்கு 3-வது மொட்டை பழனி முருகன் கோவிலில் எடுக்க வேண்டியது உள்ளது. எனவே முடி வெட்ட வேண்டாம் என கூறினார்.

இதனையடுத்து லஷிகா தனது குழந்தைக்கு அவரே முடி வெட்டினார். இதனை பார்த்த கார்த்திக்கேயன் தனது மனைவியை கண்டித்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கார்த்திகேயன் வெளியே சென்றார்.

இதில் மனவேதனை அடைந்த லஷிகா தற்கொலை செய்வது என முடிவு செய்தார். அதன்படி பெண் குழந்தை கேசின்யாவுக்கு விஷம் கொடுத்து தானும் குடித்தார். சிறிது நேரத்தில் அவர்கள் வாந்தி எடுத்தனர். இதுகுறித்து லஷிகா, தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார். இதனை கேட்டு கார்த்திகேயன் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் வீட்டிற்கு சென்று மயங்கிய நிலையில் இருந்த மனைவி மற்றும் குழந்தையை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு 2 பேருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் டாக்டர்கள் லஷிகா, கேசின்யா ஆகியோரை மேல் சிகிச்சைக்காக விமான நிலையம் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News