உள்ளூர் செய்திகள்

2 ஆட்டோ டிரைவர்களை மணந்தவர் - இன்ஸ்டாக்கிராம் காதலி விஷம் குடித்து தற்கொலை முயற்சி

Published On 2022-09-13 08:59 GMT   |   Update On 2022-09-13 08:59 GMT
  • சக்திவேலின் நண்பரும், ஆட்டோ டிரைவர் சுமன் என்பவருக்கு பூமிகாவுடன் காதல் ஏற்பட்டது. அவரையும் பூமிகா திருமணம் செய்து கொண்டார்.
  • சக்திவேலுக்கும், சுமனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று சுமன் தனது நண்பர் சக்திவேலை மதுகுடிக்கலாம் என்று கூறி அழைத்து சென்றார்.

பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையை சேர்ந்தவர் பிரகாஷ். அவரது மனைவி பூமிகா (வயது 23). இவர் இன்ஸ்டாக்கிராமில் நடிகைபோல் சித்தரித்து அடிக்கடி பாடல்கள் பாடி பதிவிட்டு வந்தார்.

இதன் மூலம் இவருக்கு பலர் இணைப்பில் இருந்தனர். இதனை அறிந்த கணவர் பிரகாஷ் கண்டித்தார். இதனால் 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன்பின்னர் பூமிகா தனது கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.

அப்போது பண்ருட்டியில் உள்ள பேக்கரிக்கு வேலைக்கு செல்லும்போது பண்ருட்டி தட்டாஞ்சாவடி காந்திநகர் காலனியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சக்திவேல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. எனவே சக்திவேலை பூமிகா திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின்னர் தன்னை அழகு பெண்ணாக சித்தரித்து மீண்டும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுவந்தார். அப்போது சக்திவேலின் நண்பரும், ஆட்டோ டிரைவர் சுமன் என்பவருக்கு பூமிகாவுடன் காதல் ஏற்பட்டது. அவரையும் பூமிகா திருமணம் செய்து கொண்டார்.

இதன் காரணமாக சக்திவேலுக்கும், சுமனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று சுமன் தனது நண்பர் சக்திவேலை மதுகுடிக்கலாம் என்று கூறி அழைத்து சென்றார். பின்னர் தனது கூட்டாளிகளுடன் சக்திவேலை சுமன் வெட்டி கொன்றார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

இதனை அறிந்த இன்ஸ்டாகிராம் காதலி பூமிகா திடீரென மாயமானார். நேற்று பண்ருட்டியில் உள்ள வீட்டுக்கு வந்தார். அப்போது எலி பேஸ்ட் சாப்பிட்டு மயங்கிகிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் பூமிகாவை தூக்கிகொண்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Tags:    

Similar News