உள்ளூர் செய்திகள்

சேலம் அருகே இளம்பெண்ணை கொன்று தீ வைத்து எரித்த மர்மநபர்கள்

Published On 2023-09-23 09:24 GMT   |   Update On 2023-09-23 09:24 GMT
  • கொலை செய்யப்பட்ட பெண் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  • முதலில் கொலை செய்யப்பட்ட பெண் அடையாளம் தெரிந்தால் தான் கொலையாளிகள் பற்றி தெரியவரும் என்பதால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காடையாம்பட்டி:

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள ஜோடுகுளி பஸ் நிறுத்தம் அருகே புளி சாத்து முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பின்புறத்தில் இன்று காலை 11 மணியளவில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண்ணை மர்மநபர்கள் யாரோ அடித்து கொன்று உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து உள்ளனர்.

இதில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் தீப்பிடித்து எரிந்தது. இதை அந்த பகுதியை சேர்ந்த ஒரு ரெயில்வே ஊழியர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார். மேலும் தீவட்டிப்பட்டி போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்.

பின்னர் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பெண்ணின் உடலில் எரிந்து கொண்டு இருந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். தொடர்ந்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் பாதி எரிந்த நிலையில் இளம்பெண் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட பெண் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பெண்ணை வேறு எங்காவது இருந்து கடத்தி வந்து கொலை செய்து பின்னர் அடையாளம் தெரியாமல் இருக்க மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். முதலில் கொலை செய்யப்பட்ட பெண் அடையாளம் தெரிந்தால் தான் கொலையாளிகள் பற்றி தெரியவரும் என்பதால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமிராக்களை கைப்பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News