உள்ளூர் செய்திகள்

நாட்டு துப்பாக்கியால் சுட்டு தொழிலாளி தற்கொலை- மனைவி பிரிந்து சென்றதால் விபரீதம்

Published On 2023-03-09 10:00 IST   |   Update On 2023-03-09 10:00:00 IST
  • மனைவி பிரிந்து சென்றதால் கண்ணதாசனும் கடந்த சில நாட்களாகவே சோகத்துடன் காணப்பட்டார்.
  • மனைவி பிரிந்து சென்றதால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து காணப்பட்டார். நேற்று இரவு வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்க சென்றார்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் தேவர்சோலை பேரூராட்சியில் உள்ளது மாணிக்கல்லாடி கிராமம்.

இந்த கிராமத்தை சேர்ந்தவர் கண்ணதாசன் (45). தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் தனது மனைவியுடன் அந்த பகுதியில் வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அடிக்கடி சண்டை போட்டதாகவும் தெரிகிறது. அவர்களை உறவினர்கள் சமாதானம் செய்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று மீண்டும் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த கண்ணதாசனின் மனைவி கோபித்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதையடுத்து கண்ணதாசன் மட்டும் தனியாக வாழ்ந்து வந்தார். மனைவி பிரிந்து சென்றதால் கண்ணதாசனும் கடந்த சில நாட்களாகவே சோகத்துடன் காணப்பட்டார்.

யாரிடமும் சரியாக பேசாமல் மவுனமாகவே இருந்து வந்தார். மனைவி பிரிந்து சென்றதால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து காணப்பட்டார். நேற்று இரவு வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்க சென்றார்.

இன்று அதிகாலை 2 மணிக்கு கண்ணதாசனின் வீட்டில் இருந்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியாகி ஓடி வந்து பார்த்தனர்.

அப்போது வீட்டிற்குள் கண்ணதாசன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். உடனடியாக மக்கள் சம்பவம் குறித்து தேவர்சோலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர் எப்படி இறந்தார் என்பதை அறிய வீடு முழுவதும் சோதனை செய்தனர். அப்போது அவரது உடல் அருகே நாட்டு துப்பாக்கி ஒன்று கிடந்தது.

அதனை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் கண்ணதாசன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, அவரிடம் நாட்டு துப்பாக்கி எப்படி வந்தது? எதற்காக நாட்டு துப்பாக்கி வைத்திருந்தார்? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News