உள்ளூர் செய்திகள்

டாஸ்மாக் கடையில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூல்- தட்டிக்கேட்ட தொழிலாளி மீது தாக்குதல்

Published On 2022-07-28 06:47 GMT   |   Update On 2022-07-28 06:47 GMT
  • விற்பனையாளர் மதுபாட்டிலுக்கு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ரூ.10 வசூலித்தார்.
  • வாலிபர் தட்டிக்கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த காக்களூர் பைபாஸ் சாலையில் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. இங்கு நேற்று மாலை திருவள்ளூரை சேர்ந்த வாலிபர் ஒருவர் மதுபாட்டில் வாங்க சென்றார்.

அப்போது அங்கு இருந்த விற்பனையாளர் மதுபாட்டிலுக்கு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ரூ.10 வசூலித்தார். இதனை வாலிபர் தட்டிக்கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனை அந்த வாலிபர் தனது செல்போனில் படம் பிடித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மதுக்கடை விற்பனையாளர், திடீரென அந்த வாலிபரை சரமாரியாக தாக்கினார். இருவரும் மதுக்கடை முன்பு கட்டிப்புரண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதனை கண்டு மதுபாட்டில் வாங்க வந்த குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த தாக்குதலில் வாலிபருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்து அவர் திருவள்ளூர் தாலுக்கா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News