உள்ளூர் செய்திகள்

உணவில் மயக்க மருந்து கொடுத்து பெண்ணிடம் நகை கொள்ளை- நட்பாக பழகிய சென்னை பெண் கைவரிசை

Published On 2022-08-27 10:00 GMT   |   Update On 2022-08-27 10:00 GMT
  • பெண்மணி வாங்கி கொடுத்த உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் சிவசக்தி உள்ளிட்ட சிலர் மயக்கமடைந்துள்ளனர்.
  • அப்போது சிவசக்தி கழுத்தில் அணிந்திருந்த 13 சவரன் நகையை பெண் திருடிச் சென்றுள்ளார்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சிவசக்தி. இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை பாக்கியம் இல்லை.

இதனையடுத்து எரையூர் கிராமத்தில் பூஜை செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று அக்கம் பக்கத்தினர் கூறியதையடுத்து நேற்று சண்முகம், அவரது மனைவி சிவசக்தி ஆகிய இருவரும் திருவள்ளூர் தேரடியில் இருந்து ஆட்டோ மூலம் எரையூர் கிராமத்திற்கு செல்வதற்காக ஏறியுள்ளனர்.

அதே ஆட்டோவில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஏறியுள்ளார். செங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் என தன்னை அறிமுகம் செய்துக் கொண்டு தானும் எரையூர் செல்வதாக கூறி ஆட்டோவில் பயணித்தவர் நட்பாக பழகியுள்ளார்.

இரவு நேரமானதால் அந்த 35 வயது பெண்மணி உணவு வாங்கி வந்து கொடுத்துள்ளார். உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் சிவசக்தி உள்ளிட்ட சிலர் மயக்கமடைந்துள்ளனர்.

அப்போது சிவசக்தி கழுத்தில் அணிந்திருந்த 13 சவரன் நகையை அந்த பெண் திருடிச் சென்றுள்ளார்.

இது குறித்து சரவணன் புல்லரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன், தாலுக்கா இன்ஸ்பெக்டர் கமலஹாசன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உணவு சாப்பிட்டு மயக்கமடைந்த 3 பேர் தற்போது திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News