உள்ளூர் செய்திகள்

வாலாஜாவில் குடிபோதையில் தொடர்ந்து தகராறு செய்ததால் ஆத்திரம்- கணவனை வெட்டி கொன்ற மனைவி

Published On 2023-02-03 05:20 GMT   |   Update On 2023-02-03 05:20 GMT
  • குடிபோதையில் தொடர்ந்து தகராறு செய்ததால் கணவனை வெட்டி கொலை செய்ததாக அவர் கூறினார்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து கலைச்செல்வியை கைது செய்தனர்.

வாலாஜா:

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த ஒழுகூர் வடமேட்டு தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (வயது48) கட்டிட மேஸ்திரி.

இவரது மனைவி கலைச்செல்வி (38) தனியார் ஷூ கம்பெனியில்வேலை செய்து வந்தார்.இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.

ஏழுமலைக்கு குடிப்பழக்கம் உள்ளதால் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்தார்.

இதனால் ஏழுமலை கலைசெல்வி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டை நடப்பது வழக்கம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு ஏழுமலை அதிகப்படியாக குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டார்.

மேலும் கலைச்செல்வியை தொடர்ந்து திட்டி தாக்கினார். ஒரு கட்டத்தில் தன்னை தாக்க வந்த ஏழு மலையை தடுத்து அருகில் இருந்த கத்தியை எடுத்து அவரது கழுத்தில் வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே ஏழுமலை துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்து வாலாஜா போலீசார் அங்கு சென்று ஏழுமலையின் பிணத்தை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலை சம்பவம் குறித்து கலைச்செல்வியிடம் விசாரணை நடத்தினர்.

குடிபோதையில் தொடர்ந்து தகராறு செய்ததால் கணவனை வெட்டி கொலை செய்ததாக அவர் கூறினார்.

இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து கலைச்செல்வியை கைது செய்தனர்.

குடிபோதையால் ஏற்பட்ட சண்டையில் கணவனை மனைவியே வெட்டிக்கொன்ற சம்பவம் வாலாஜா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News