உள்ளூர் செய்திகள்

பொன்னேரி அருகே மின்தடையை கண்டித்து கிராமமக்கள் மறியல்

Published On 2022-09-24 13:11 IST   |   Update On 2022-09-24 13:11:00 IST
  • கடந்த ஒரு மாதமாக கிராமங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது.
  • பகல் மற்றும் இரவு நேரங்களில் தொடரும் மின்வெட்டால் கிராமமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

பொன்னேரி:

பொன்னேரி அடுத்த மெதூர் துணை மின் நிலையத்தில் இருந்து ஆவூர், கோளூர், அண்ணா மலைச்சேரி எடக்குப்பம், இழுபாக்கம், பனப்பாக்கம் திருப்பாலைவனம், பழவேற்காடு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக இந்த கிராமங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. பகல் மற்றும் இரவு நேரங்களில் தொடரும் மின்வெட்டால் கிராமமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவும் ஆவூர், அண்ணா மலைச்சேரி, மெதூர் உள்ளிட்ட பகுதியில் நேற்று மாலையும் மின்தடை ஏற்பட்டது. பின்னர் இரவு வரை மின்சப்ளை வழங்கப்படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த கிராமமக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் ஆவூர் ஊராட்சி மன்றத்தலைவர் டில்லி பாபு தலைமையில் மெதூர் துணை மின் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

மேலும் அவர்கள் பழவேற்காடு- பொன்னேரி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் திருப்பாலைவனம் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதன்பின்னர் இரவு 11 மணிக்கு மேல் அப்பகுதியில் மின்சப்ளை சீரானது.

Tags:    

Similar News