உள்ளூர் செய்திகள்

வத்தலக்குண்டு அருகே கார் மீது லாரி மோதியதில் 3 பேர் பலி

Published On 2023-05-05 05:33 GMT   |   Update On 2023-05-05 05:33 GMT
  • கார் திண்டுக்கல்-தேனி மெயின்ரோட்டில் இன்று அதிகாலை வத்தலக்குண்டு பைபாஸ் பகுதியில் வந்து கொண்டிருந்தது.
  • விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வத்தலக்குண்டு:

மயிலாடுதுறை பூம்புகார் சாலையை சேர்ந்தவர் ரபீக் (வயது50). இவர் வெற்றிலை விவசாயம் செய்து வருகிறார். இவர் தனது தொழில் நிமித்தமாக அடிக்கடி கேரள மாநிலம் மூணாறுக்கு வந்து செல்வது வழக்கம். அதன்படி நேற்று இரவு தனது காரில் மூணாறுக்கு வந்துகொண்டிருந்தார்.

காரில் தனது உறவினரான திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியை சேர்ந்தவர் சமீராபானு (41). உடன் வந்தார். காரை திருவாரூர் மாவட்டம் தட்சணம் பகுதியை சேர்ந்த வீரமணி என்பவர் ஓட்டி வந்தார். அவருக்கு உதவியாக அதே பகுதியை சேர்ந்த சேகர் என்பவரும் வந்தார். கார் திண்டுக்கல்-தேனி மெயின்ரோட்டில் இன்று அதிகாலை வத்தலக்குண்டு பைபாஸ் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது கேரள மாநிலம் வண்டிபெரியாறு பகுதியில் இருந்து டீத்தூள் லோடு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை குஞ்சுமோன் (49) என்பவர் ஓட்டி வந்தார்.

எதிர்பாராத விதமாக கார் மீது லாரி பயங்கரமாக மோதியது. இதில் காருக்குள் இருந்த சமீராபானு, ரபீக், டிரைவர் வீரமணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். சேகர் படுகாயம் அடைந்தார். இது குறித்து வத்தலக்குண்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்தவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த 3 பேரையும் பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகாலை நடந்த இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்.

Tags:    

Similar News