லாரி மீது தூங்கிய டிரைவர் தவறி விழுந்து பலி
- சென்னை நொளம்பூர் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர்:
சென்னை நொளம்பூர் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி (வயது 40). லாரி டிரைவரான இவர் கடந்த 7-ந் தேதி புனேயில் இருந்து பிளாஸ்டிக் குழாய்களை ஏற்றிக்கொண்டு திருவள்ளூருக்கு வந்துள்ளார். அவருடன் மற்றொரு டிரைவரான அயப்பன் என்பவரும் உடன் இருந்தார். அவர்கள் திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பிளாஸ்டிக் பைப்புகளை இறக்கிவிட்டு மது குடித்ததாக தெரிகிறது. அப்போது மது போதையில் செல்வமணி லாரியின் மேல் படுத்து தூங்கினார்.
மற்றொரு டிரைவரான அயப்பன் லாரியின் உள்ளே படுத்துக்கொண்டார். நள்ளிரவில் செல்வமணி போதையில் லாரியின் மேலிருந்து கீழே தவறி விழுந்தார். இதில் அவருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அயப்பன் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வந்த செல்வமணி சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.