திருவள்ளூர் அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலி
- டிராக்டரின் பின்பக்க டயரில் சிக்கிய முதியவர் ரவி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் பத்தியால் பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது60). கூலித் தொழிலாளி. இவர் டிராக்டரில் எம்சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு டிரைவர் இருக்கையின் அருகில் அமர்ந்து பயணம் செய்தார். காக்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது ஈக்காடு அருகே உள்ள வளைவில் டிராக்டரை டிரைவர் வேகமாக திருப்பினார்.
அப்போது அங்குள்ள வேகத்தடையில் டிராக்டர் ஏறி இறங்கியதில் நிலைதடுமாறிய ரவி தவறி கீழே விழுந்தார். இதில் டிராக்டரின் பின்பக்க டயரில் சிக்கிய முதியவர் ரவி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் புல்லரம்பாக்கம் போலீசார் விரைந்து வந்து ரவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து நடந்ததும் டிராக்டர் ஓட்டிவந்த டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.