உள்ளூர் செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வீரவணக்க பொதுக்கூட்டம்: சிதம்பரத்தில் நாளை திருமாவளவன் பேசுகிறார்

Published On 2023-05-16 06:20 GMT   |   Update On 2023-05-16 06:20 GMT
  • 2009-ம் ஆண்டு மே 17-ந் தேதி உலகமே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும் போது, முள்ளி வாய்க்கால் நிலப்பரப்பில் வைத்து தமிழினப்படுகொலை நடந்தது.
  • பிரபாகரன் தலைமையில் விடுதலைப்புலிகள் நடத்திய போராட்டம் அறம் சார்ந்த இன விடுதலைப் போராட்டமாகும்.

சென்னை:

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வீரவணக்கப் பொதுக்கூட்டம் கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரில் நாளை நடைபெறுகிறது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. பங்கேற்று பேசுகிறார்.

இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் துணை பொதுச்செயலாளர் வன்னிஅரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2009-ம் ஆண்டு மே 17-ந் தேதி உலகமே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும் போது, முள்ளி வாய்க்கால் நிலப்பரப்பில் வைத்து தமிழினப்படுகொலை நடந்தது.

பிரபாகரன் தலைமையில் விடுதலைப்புலிகள் நடத்திய போராட்டம் அறம் சார்ந்த இன விடுதலைப் போராட்டமாகும்.

ஈழத்தந்தை செல்வா தலைமையிலான அறவழிப் போராட்டமாகட்டும், பிரபாகரன் தலைமையிலான ஆயுதவழி அறப்போராட்டமாகட்டும் எல்லாமே மக்களுக்கான விடுதலைப் போராட்டமே!

ஆனால், இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஈழத் தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தை தீவிரவாதமாக பார்த்து தடை செய்தது. தடைகளை மீறி போராட்டங்கள் தொடரத்தான் செய்கிறது.

2010-ம் ஆண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் எமது தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் பேசும் போது,

"கடைசி விடுதலைச் சிறுத்தைகள் இருக்கும் வரை, ஈழவிடுதலைக்காக போராடுவோம்-ஈழ விடுதலைப் போரை முன்னெடுப்போம்" என பிரகடனப்படுத்தினார்.

எத்தனையோ அவதூறுகள், எத்தனையோ சாதிவெறித் தாக்குதல்கள்

அத்தனையையும் முறியடித்து மக்களுக்காக நின்று களமாடி வருகிறோம்.

இனப்படு கொலைகளுக்கு எதிரான களத்தில், எந்த சோர்வும் இல்லாமல் விடுதலைச் சிறுத்தைகளை வழிநடத்தி வரும். தமிழ்த்தேசியப் பெருந்தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில், நாளை மாலை 4 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கூட்டம் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் நடைபெறுகிறது.

இனப்படுகொலைகளுக்கு எதிராக களமாட உறுதி ஏற்போம்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News