உள்ளூர் செய்திகள்

கிராமத்துக்குள் புகுந்த யானையை 2 மணி நேரம் போராடி விரட்டிய வனத்துறையினர்

Published On 2023-12-06 14:07 IST   |   Update On 2023-12-06 14:07:00 IST
  • யானை விவசாய தோட்டத்திற்குள் புகுந்ததால் ஆங்காங்கே சில இடங்களில் விவசாய பயிர்கள் சேதம் அடைந்தன
  • காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறாமல் தடுக்க அகழி வெட்ட வேண்டும்.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள விளை பொருட்களை சேதப்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில் சத்தியமங்கலம் அடுத்துள்ள கெம்பநாயக்கன்பாளையம் பெரும்பள்ளம் அணை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் யானை பட்டப்பகலில் கெம்பநாயக்கன்பாளையம் வன சோதனை சாவடி அருகே கடம்பூர் சாலையை கடந்து சென்று அப்பகுதியில் உள்ள விவசாயத் தோட்டங்களில் நுழைந்தது.

அங்கு வாழை, கரும்பு, வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை சேதப்படுத்தியது. பட்டப்பகலில் காட்டு யானை விவசாய தோட்டத்திற்குள் நடமாடுவதை கண்ட அப்பகுதி விவசாயிகள் மற்றும் தோட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயக்கூலி தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்து அலறியடித்து ஓடினர்.

இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சத்தியமங்கலம் வனச்சரக ஊழியர்கள் மற்றும் டி.என்.பாளையம் வனச்சரக ஊழியர்கள் இணைந்து சுமார் 2 மணி நேரம் போராடி காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

யானை விவசாய தோட்டத்திற்குள் புகுந்ததால் ஆங்காங்கே சில இடங்களில் விவசாய பயிர்கள் சேதம் அடைந்தன. பட்டப்பகலில் காட்டு யானை ஊருக்குள் புகுந்து விவசாய தோட்டத்திற்குள் நடமாடியதால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொது மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறாமல் தடுக்க அகழி வெட்ட வேண்டும். ஏற்கனவே உள்ள அகழியை ஆழம் மற்றும் அகலப்படுத்த வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News