தமிழ்நாடு

பிச்சை எடுத்து சேர்த்த ரூ.1½ லட்சம்: போதையில் இருந்த பெண்ணிடம் பறிமுதல் செய்த பறக்கும் படை

Published On 2024-03-29 10:23 GMT   |   Update On 2024-03-29 10:24 GMT
  • பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.
  • போதையில் இருந்த அந்த பெண்ணை ஆலங்காட்டில் உள்ள ஒரு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

திருப்பூர்:

திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, திருப்பூர் காங்கயம் ரோடு நல்லூர் சர்ச் அருகே 36 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குடிபோதையில் சுற்றி திரிந்தார். அப்போது அங்கு பாராளுமன்ற தேர்தலையொட்டி பறக்கும் படையை சேர்ந்த துணை மாநில வரி அலுவலர் குணசேகர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உள்ளிட்ட போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அவர்களிடம் அருகில் இருந்த கடைக்காரர்கள், சுற்றி திரியும் பெண் அதிக பணம் வைத்திருப்பது குறித்து தெரிவித்துள்ளனர்.

உடனே அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். பின்னர் அவர் சேலையில் சுற்றி வைத்திருந்த பொருள் என்னவென்று பார்த்த போது அதில் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் இருந்தது தெரிய வந்தது. தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் பணத்துக்கு உரிய ஆவணங்களை இல்லாததால் அதனை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன்குமார் கிரியப்பனவரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரது மனைவி மணிமேகலை (வயது 36) என்பதும் கடந்த 5 நாட்களுக்கு முன் பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சென்று பிச்சை எடுத்து வைத்திருந்த பணம் என தெரியவந்தது.

பறிமுதல் செய்த பணத்தை உதவி ஆணையாளர் (கணக்கு) தங்கவேல் ராஜன் கருவூலத்திற்கு அனுப்பி வைத்தார். போதையில் இருந்த அந்த பெண்ணை ஆலங்காட்டில் உள்ள ஒரு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News