உள்ளூர் செய்திகள்

தென்காசி வாலிபர் மர்ம மரணம்: லிவிங்டூகெதரில் இருந்த சென்னை இளம்பெண்ணிடம் விசாரணை

Published On 2022-12-02 10:01 GMT   |   Update On 2022-12-02 10:01 GMT
  • சுவேதா மற்றும் அவரது நண்பர்கள் 4 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • பிரேத பரிசோதனை முடிவுக்கு பிறகு சூர்யா எவ்வாறு இறந்தார்? என தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

கொடைக்கானல்:

தென்காசி சக்தி நகரைச் சேர்ந்தவர் அய்யாத்துரை. இவர் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவரது மகன் சூர்யா (வயது 30). இவர் பிலிம் டெக்னாலஜி படித்துள்ளார். அப்போது இவருக்கும் சென்னை கொட்டிவாக்கம் வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்த பிரதாஸ் மகள் சுவேதா என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் லிவிங்டூகெதரில் வாழ்ந்து வந்தனர். அதன் பிறகு அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சூர்யா கொடைக்கானலுக்கு வந்து சொந்தமாக நிலம் வாங்கி காட்டேஜ் கட்டும் முயற்சியில் ஈடுபட்டார்.

இதனிடையே அவ்வப்போது சுவதா மீண்டும் சூர்யாவுடன் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளார். அதன் பிறகு இவர்களுக்குள் மீண்டும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் கொடைக்கானல் கல்லுக்குழி மலோனிகுடில் என்ற இடத்தில் கடந்த 9 மாதங்களாக இருவரும் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்தனர்.

சூர்யாவுக்கு இசை கச்சேரிகள் நடத்துவதில் ஆர்வம் இருந்து வந்ததாக தெரிகிறது. அடிக்கடி வெளியே சென்று விட்டு மீண்டும் கல்லுக்குழி பகுதிக்கு வந்துள்ளார். நேற்று சுவேதாவுக்கும் சூர்யாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் சூர்யாவை மாடியில் இருந்து சுவேதா கீழே தள்ளியதாக தெரிகிறது. பின்னர் சுவேதா தனது நண்பர்களை உதவிக்கு அழைத்துள்ளார். அவர்கள் வந்து பார்த்த போது சூர்யா பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.

இதை பார்த்ததும் அவரை கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு வந்தனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டார். இதனையடுத்து சூர்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இது குறித்து சூர்யாவின் தந்தை அய்யாத்துரை கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் தனது புகாரில் சூர்யாவை அடித்து கொலை செய்துள்ளனர். அவர் படியில் விழுந்து இறந்ததாக கூறுவதை ஏற்க முடியாது. அவர் உடலில் பல்வேறு பாகங்களில் காயம் உள்ளது. எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்கு மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் தலைமையில் டி.எஸ்.பி. மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

சூர்யாவின் செல்போன் மற்றும் சுவேதாவின் செல்போன்களை வாங்கி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சூர்யாவின் அறையில் வேறு ஏதேனும் பொருட்கள் சந்தேகப்படும்படியாக உள்ளதா? என்றும் சோதனை நடத்தி வருகின்றனர்.

சுவேதா மற்றும் அவரது நண்பர்கள் 4 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிவுக்கு பிறகு சூர்யா எவ்வாறு இறந்தார்? என தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். 

Tags:    

Similar News