தாம்பரம் அருகே கடன் தொல்லையால் பெண் தற்கொலை
- மன உளைச்சலுக்கு ஆளான பிரேமா தனது அறைக்குள் சென்று கதவை உள்புறமாக பூட்டிவிட்டு தூக்குப்போட்டு கொண்டார்.
- பீர்க்கன்காரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தாம்பரம்:
தாம்பரம் முடிச்சூர் சாலை சக்தி நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பிரேமா (வயது 39). இவர், சென்னை துறைமுகத்தில் அலுவலக பணியாளராக வேலை பார்த்து வந்தார்.
இந்த தம்பதியினர் தீபாவளி சீட்டு நடத்தி வந்தனர். இதில் பலரிடம் வாங்கிய ரூ.8 லட்சம் நிலுவையில் இருந்தது. கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தனர். பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்ததாகவும் தெரிகிறது. கடன் தொல்லை அதிகமானதால் மன உளைச்சலுக்கு ஆளான பிரேமா நேற்று காலை தனது அறைக்குள் சென்று கதவை உள்புறமாக பூட்டிவிட்டு தூக்குப்போட்டு கொண்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய கணவர் மற்றும் மகன் இருவரும் கதவை உடைத்து உள்ளே சென்று தூக்கில் தொங்கிய பிரேமாவை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், பிரேமா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி பீர்க்கன்காரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.