உள்ளூர் செய்திகள்

லத்தேரி அருகே தி.மு.க பிரமுகர் கொலையில் 50 பேரிடம் விசாரணை

Published On 2023-01-18 06:30 GMT   |   Update On 2023-01-18 06:30 GMT
  • தொழில் போட்டி காரணமாக கொலை நடைபெறவில்லை என்பது தெரிய வந்தது.
  • தனிப்படை போலீசார் இதுவரை சுமார் 50 பேரிடம் இந்த கொலை சம்பந்தமாக விசாரணை நடத்தி உள்ளனர்.

வேலூர்:

காட்பாடி அருகே உள்ள லத்தேரி அடுத்த பி. என். பாளையம் புதூர் கொல்லைமேடு கிராமத்தை சேர்ந்தவர் நாகேஷ் (வயது 41) தி.மு.க. பிரமுகரான இவர் பல ஆண்டுகளாக மேஸ்திரி தோப்பு பகுதியில் பால் கம்பெனி நடத்தி வந்தார்.

கடந்த 10-ந் தேதி நள்ளிரவு அவரது கம்பெனியை பூட்டிவிட்டு பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.

அப்போது வழியில் மர்ம நபர்கள் அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும் கத்தியால் நாகேஷின் கழுத்து கை ஆகிய இடங்களில் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதில் பலத்த காயமடைந்த நாகேஷ் ரத்த வெள்ளத்தில் பலியானார்.

தொழில் போட்டி காரணமாக நாகேஷ் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த சிலரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

இதில் தொழில் போட்டி காரணமாக கொலை நடைபெறவில்லை என்பது தெரிய வந்தது. இதனையடுத்து விசாரணைக்கு அழைத்து வந்தவர்களை போலீசார் விடுவித்தனர்.

கொலை வழக்கில் துப்பு துலக்குவதற்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மேலும் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தலைமையிலான தனிப்படையும் இந்த கொலையில் துப்பு துலக்க களமிறங்கி உள்ளது.

தனிப்படை போலீசார் இதுவரை சுமார் 50 பேரிடம் இந்த கொலை சம்பந்தமாக விசாரணை நடத்தி உள்ளனர். ஆனால் இதுவரை கொலையாளிகள் குறித்த தகவல்கள் தெரியவில்லை. தொடர்ந்து இது குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News