உள்ளூர் செய்திகள்

புகாரை முறையாக விசாரிக்காத சப்-இன்ஸ்பெக்டர் ஊட்டிக்கு இடமாற்றம்

Published On 2022-07-27 08:30 GMT   |   Update On 2022-07-27 08:30 GMT
  • பங்காரு, ஏற்கனவே நிலப்பிரச்சினை தொடர்பாக முதல்-அமைச்சரின் தனிப் பிரிவுக்கு புகார் மனு அனுப்பி இருந்தார் என்பது தெரியவந்துள்ளது.
  • புகார் தொடர்பாக விசாரிக்கும்படி சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் கெங்கவல்லி போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார்.

சேலம்:

சேலம் மாவட்டம் கெங்கவல்லி கடம்பூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 42). லாரி டிரைவர். இதே ஊரை சேர்ந்த அவரது அத்தை பங்காரு (62). இவர்கள் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது.

கடந்த 24-ந்தேதி கடம்பூரில் இருந்து பைத்தூருக்கு மோட்டார்சைக்கிளில் சென்ற சீனிவாசனை, பங்காருவின் உறவினர்களான ரவிச்சந்திரன், இவரது மகன்கன் மணிகண்டன், விஜி ஆகியோர் மறித்து அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இது குறித்து ஆத்தூர் ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ரவிச்சந்திரனை கைது செய்தனர். மணிகண்டன், விஜி ஆகியோரை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் பங்காரு, ஏற்கனவே நிலப்பிரச்சினை தொடர்பாக முதல்-அமைச்சரின் தனிப் பிரிவுக்கு புகார் மனு அனுப்பி இருந்தார் என்பது தெரியவந்துள்ளது. இந்த புகார் தொடர்பாக விசாரிக்கும்படி சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் கெங்கவல்லி போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி கடந்த 21-ந்தேதி கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில், கொலையுண்ட சீனிவாசன் உள்ளிட்டோரை அழைத்து விசாரித்தனர். ஆனால் பங்காருவை அழைத்து விசாரிக்கவில்லை என கூறப்படுகிறது.

மேலும் புகாரை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் அலட்சியமாக விசாரித்ததால் தான் இந்த கொலை நடந்ததும், முறையாக விசாரித்து இருந்தால் முன்கூட்டியே கொலையை தடுத்து இருக்கலாம் என்றும் புகார் எழுந்தது.

இந்த விஷயம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் கவனத்துக்கு வந்தது. இதையடுத்து சிவலிங்கத்தை வேறு மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்ய போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை செய்தார். அதை ஏற்று கோவை மண்டல ஐ.ஜி. சுதாகர் சிவலிங்கத்தை ஊட்டிக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

Tags:    

Similar News