சிவகங்கையில் ரவுடி சரமாரி வெட்டிக்கொலை- போலீசார் விசாரணை
- சிவகங்கை அருகே உள்ள காமராஜர் காலனியை சேர்ந்தவர் பவானி.
- கடந்த சில வாரங்களாக ஆகாஷ் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார்.
சிவகங்கை:
சிவகங்கை அருகே உள்ள காமராஜர் காலனியை சேர்ந்தவர் பவானி. இவரது கணவர் சித்திரைசாமி சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு ஆகாஷ் (25) என்ற ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி கோவையில் வசித்து வருகிறார்.
ஆகாஷ் சரியாக வேலைக்கு செல்லாமல் ஊதாரியாக சுற்றியுள்ளார். மேலும் வழிப்பறி, நகை பறிப்பு, கொள்ளை போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிகிறது. இதன் காரணமாக ஆகாஷ் மீது போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மானாமதுரை கோர்ட்டில் இருந்து வெளியே வந்த ஒரு நபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆகாஷ் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் பழிக்குப்பழியாக ஆகாஷை கொலை செய்ய சிலர் திட்டமிட்டதாக தெரிகிறது.
இதன் காரணமாக கடந்த சில வாரங்களாக ஆகாஷ் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். ஒவ்வொரு வாரம் தான் தங்கியிருந்த இடத்தை மாற்றி கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக மட்டாகுளத்தில் உள்ள நண்பரின் வீட்டின் அருகே உள்ள மற்றொரு வீட்டின் மாடியில் ஆகாஷ் இரவு நேரத்தில் தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இதனை அறிந்த எதிர்தரப்பு கும்பல் அவரை கொலை செய்ய திட்டமிட்டது. நேற்று இரவு நண்பர் வீட்டின் மாடியில் ஆகாஷ் படுத்து தூங்கினார். இன்று அதிகாலை அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் சத்தம் இல்லாமல் மாடிக்கு சென்றது. அங்கு தூங்கி கொண்டிருந்த ஆகாஷை அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
இதில் படுகாயம் அடைந்த ஆகாஷ் சம்பவ இடத்திேலயே இறந்தார். பின்பு அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். ஆகாஷ் கொலை செய்யப்பட்ட சம்பவம் இன்று காலை தெரியவந்தது. அது குறித்து சிவகங்கை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆகாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆகாஷ் கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழிக்குப்பழியாக ஆகாஷ் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதிகாலையில் வீ்டு புகுந்து ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் சிவகங்கையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.